சென்னை: சென்னையில் சிறார்களை அழைத்து வந்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் விவசாய அணியில் சேர்த்த வினோத சம்பவம் நடந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விவசாய அணியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது பாஜக மாநில விவசாய அணி துணைத்தலைவர் வளசரவாக்கம் முத்துராமன் என்பவர் 50 சிறார்களுக்கு பச்சை துண்டு போட்டு அழைத்து வந்து அண்ணாமலை முன்னிலையில் பாஜக விவசாய அணியில் இணைத்தார்.
கட்சியில் இணைய வந்தவர்கள் சிறார் என தெரிந்த பிறகும் அண்ணாமலை அவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டது சர்ச்சை ஆகியுள்ளது. பாஜகவின் விவசாய அணியில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பிரியாணி மற்றும் பணம் தருவதாக கூறியதால் பாஜக அலுவலகம் வந்ததாக சிறார்கள் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வரும் பல ரௌடிகளை பாஜகவில் இணைத்து பதவி வழங்கி வரும் விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது பள்ளி செல்லும் வயதுடைய சிறார்களை அக்கட்சியின் விவசாய அணியில் சேர்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.