Thursday, June 13, 2024
Home » இளைஞர்களே ரெடியா?

இளைஞர்களே ரெடியா?

by Karthik Yash

இந்தியாவா…? கிரிக்கெட் மட்டும் நல்லா விளையாடுவாங்க…! மற்ற விளையாட்டுகளில் பெரிதாக ஆர்வம் காட்டவோ, சாதிக்கவோ மாட்டாங்க… என்ற நிலை இருந்தது ஒரு காலம். அதன்பின்னர் தடகளத்தில் பி.டி.உஷா, அஞ்சு ஜார்ஜ், ஹாக்கியில் தன்ராஜ் பிள்ளை, செஸ்சில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, நீச்சலில் குற்றாலீஸ்வரன், டென்னிஸ் லியாண்டர் பயஸ் – பூபதி, பேட்மிண்டனில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஈட்டி எறிதல் என பல்வேறு விளையாட்டுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்து வியக்க வைத்தனர்.

இன்னும் வெளியுலகுக்கு தெரியாமல் எத்தனையோ வீரர், வீராங்கனைகள் கிராமங்கள், நகர்ப்புறங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது திறமையை கண்டறிந்து, ஊக்குவிக்க உருவானதே கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள். 2018ம் ஆண்டு முதல் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் 18 மற்றும் 21 வயதிற்குட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகளாக நடத்தப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. அதற்கு பின் அரியானா, ம.பி மாநிலங்களில் நடத்தப்பட்டன. நடப்பாண்டு இந்த போட்டிகளை ஏற்று நடத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.

18 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம். இம்முறை அதிகளவு மாநிலங்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறமையை வெளிக்காட்ட உள்ளனர். இவர்களுடன் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் வர உள்ளனர். ஜனவரி 19ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கான தமிழக வீரர்களுக்கான தேர்வு, கடந்த மாதம் நடந்தது. தேர்வு பெற்ற வீரர்கள், தங்களது திறமையை காட்ட உள்ளனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் கபடி, தடகளம், மல்யுத்தம், பாக்ஸிங், துப்பாக்கி சுடுதல், வாலிபால், ஜூடோ, நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய அளவில் ஒரு மினி ஒலிம்பிக் போலவே போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டுகளை விட இம்முறை 4 போட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்கான விழாவில் பங்கேற்க அழைப்பதற்காக, பிரதமர் மோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை வெள்ளம்
புரட்டிப் போட்டாலும், எந்தவித தடங்கலுமின்றி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திறம்பட தமிழக அரசு செய்து வருகிறது. கல்வி உட்பட பிற துறைகளில் வளர்ச்சி கண்டு வரும் தமிழகம், உடல்நலனை மேம்படுத்தும் விளையாட்டு போட்டிகளுக்கான சிறந்த தளமாகவும் விளங்குவது பாராட்டிற்குரியது.

You may also like

Leave a Comment

14 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi