சென்னை: பிரபல நடிகை மஞ்சு வாரியர் காரை விடாமல் இளம்பெண் ஒருவர் துரத்திய சம்பவம் கொச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ‘அசுரன்’, ’துணிவு’ படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் மஞ்சு வாரியர் சமீபத்தில் கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட இளம்பெண் ஒருவர் அவருடைய காரை விடாமல் துரத்தி உள்ளார். இதை பார்த்த மஞ்சு வாரியர் உடனடியாக காரை நிறுத்த செய்து கண்ணாடியை இறக்கி அந்த பெண்ணிடம் ‘ஏன் இப்படி ஓடி வருகிறாய்? உனக்கு ஏதேனும் ஆகிவிட்டது என்றால் என்ன செய்வது?’ என்று அறிவுரை கூறினார்.
இதனை அடுத்து அந்த இளம் பெண் ‘என்னுடைய அம்மா உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என்றும் அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நீங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மஞ்சு வாரியர் அவருடைய அம்மாவின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு ‘நிச்சயம் உங்கள் அம்மாவிடம் பேசுகிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார்.