Thursday, May 9, 2024
Home » தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!

தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க பலர் தயிரை விரும்பி சாப்பிடுகிறார்கள். தயிர் வயிற்றுக்கு நிவாரணம் தருகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால், சில உணவுப் பொருட்களுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும் தன்மை உண்டு. அந்தவகையில், தயிருடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன் என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடக்கூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண் குஷ்டம் போன்றவை ஏற்படும். தயிர் மற்றும் மீன் இரண்டிலும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன, அவற்றை ஒன்றாகச் சாப்பிடும்போது, ​​அஜீரணம் மற்றும் இரைப்பைக் கோளாறுகளை உண்டாக்கும்.வறுத்த பொருட்களுடன் தயிரை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. எண்ணெய் நிறைந்த உணவை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை கெடுக்கும். நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும்.

பெரும்பாலும் தயிரில் வெங்காயத்தைப் போட்டு ரைதா செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் இது சரியான கலவை அல்ல. இப்படி செய்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தயிருடன் வெங்காயம் கலந்து சாப்பிட்டால் அமிலத்தன்மை, வாந்தி, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்படும். பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. தயிரில் உள்ள அதிகளவு புரதமானது, பழங்கள் சாப்பிட்ட பின்னர் செரிமானத்தினை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்திவிடும். அதற்குக் காரணம் பழங்களில் உள்ள அமிலத் தன்மையாகும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் இவற்றுடன் வாழைப்பழம் , கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும்.

அதிலும் இரவு நேரங்களில் கூடவே கூடாது.முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதே போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது. தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

தொகுப்பு: ரிஷி

 

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi