சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடைக்காலத்தையொட்டி வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவை இரவு பகலாக தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. இதையடுத்து, முதன்முறையாக சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: முதல்முறையாக சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2ம் தேதி 9.6 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், சென்னையில் நேற்றைய தினம் மின் தேவை 3,872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.