பெங்களூரு: கர்நாடக மாநில அரசியல் மூத்த தலைவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவதாக நேற்று அறிவித்தார். இதன் காரணமாக பாஜ தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது குறித்து பெங்களூருவில் எடியூரப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ‘மக்களவை தேர்தலில் 22 முதல் 23 தொகுதிகளில் பாஜ வெற்றிபெறவேண்டும். இதை முன்னிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறேன். வீட்டில் ஓய்வு என்ற பேச்சுக்கே இனி இடம் கிடையாது. மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார வெட்டு நிரந்தமாகிவிட்டது. இதை எல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் பிரசார பயண திட்டம் தயார் ஆகிவிடும். மாநில அரசின் நிர்வாக தோல்வி,. காங்கிரஸ் தலைவர்களின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அமைச்சர்களின் செயல்படாத தன்மைகளை மக்களிடம் விளக்குவேன். மேலும் மாநிலம் முழுவதும் பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும். விரைவில் மாநில எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவார்‘ என்றார்.