பிலிப்பைன்ஸ்: உலகக்கோப்பை ஆடவர் கூடைப்பந்து போட்டியில் ஜெர்மனி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செர்பியாவுடன் ஜெர்மனி பலப்பரீட்சை நடத்தியது. இதில் ஆட்டநேர முடிவில் 83-77 என்ற புள்ளிகணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் டென்னிஸ் அதிகபட்சமாக 28 புள்ளிகள் எடுத்து கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி முதல் முறையாக உலகக்கோப்பை ஆடவர் கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியுள்ளது. ஜெர்மனி அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 3வது இடத்திற்கான போட்டியில் கெனடா 127க்கும் 118 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் கெனடா முதல் முறையாக உலக கோப்பை ஆடவர் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.