புதுடெல்லி: சிலியில் இம்மாதம் 29ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை 10வது இளையோர் மகளிர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஜெர்மனி, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளும் இருக்கின்றன. தென் ஆப்ரிக்காவில் 2022ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்து 4வது இடத்தை பிடித்தனர்.
இந்த முறை கோப்பை கட்டாயம் என்ற இலக்குடன் இந்திய மகளிர் சிலிக்கு பயணம் செய்ய உள்ளனர். இந்நிலையில் அதற்கான இந்திய மகளிர் அணியை நேற்று ஹாக்கி இந்தியா அறிவித்தது. பிரீத்தி தலைமையிலான இந்த அணியில் குஷ்பூ, மாதுரி(கோல்கீப்பர்கள்), நீலம், ஜோதி, ரூபனி, மதிமா, மஞ்சு, ஜோதி சாத்ரி, ஹீனா, சுஜாதா, ருதுஜா(துணை கேப்டன்), சாக்ஷி, மும்தாஜ், அன்னு, தீபிகா, திபி, சுனேலிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.