Wednesday, May 29, 2024
Home » பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்து மகளிர் சுயஉதவி குழுவினர் திடீர் சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்து மகளிர் சுயஉதவி குழுவினர் திடீர் சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு

by Ranjith

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கியதை கண்டித்து, மகளிர் சுயஉதவி குழுவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உத்திரமேரூர் அருகே கம்மாளம்பூண்டி கிராமத்தில், `பேங்க் ஆப் இந்தியா’ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கம்மாளம்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகளிர் சுயஉதவி குழுவினர், பள்ளி – கல்லூரி மாணவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில், கம்மாளம்பூண்டி கிராமம் அருகே உள்ள மேல்தூளி கிராமத்தில் 13 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.

இந்த 13 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும், கடந்த 2013ம் ஆண்டு சுமார் ரூ.19 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனை 13 சுயஉதவி குழு பெண்களும், அதே கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்பவரிடம் மாதா மாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், புஷ்பா வங்கிக்கு முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், வங்கி நிர்வாகம் 13 சுயஉதவி குழு பெண்களின் வங்கி கணக்குகளை முடக்கியது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேரில் வந்து கேட்டுள்ளனர்.

இதற்கு வங்கி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால், ஆத்திரமடைந்த பெண்கள் உத்திரமேரூர் – எண்டத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகளிர் சுயஉதவி குழு பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் உத்திரமேரூர் – எண்டத்தூர் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

15 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi