தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் நவலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி பாஞ்சாலை (59). நவலை கிராமத்தில், பாஞ்சாலை கடந்த 30 ஆண்டுகளாக பீப், சிக்கன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, அரூரில் மாட்டிறைச்சி வாங்கிக்கொண்டு, பாஞ்சாலை அரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் மாட்டிறைச்சியை எடுத்து வந்ததை அறிந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும், அரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோப்பிரிபட்டி அருகே, பாஞ்சாலையை பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, மற்றொரு பேருந்தில் ஏறி, தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அன்றிரவு 9.30 மணிக்கு, நவலைக்கு வந்த அதே பேருந்தை நிறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்தநிலையில் பஸ் டிரைவர் சசிக்குமார், கண்டக்டர் ரகு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.