திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், முன்னாள் பாஜ ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேள்வி கேட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி பெண் நிருபரின் தோளில் அவர் கை வைத்தார். அந்த நிருபர் கையை தட்டி விட்ட போதிலும் மீண்டும் சுரேஷ் கோபி அவரது தோள் மீது கை வைத்தார். இதுகுறித்து அந்தப் பெண் நிருபர் கோழிக்கோடு நடக்காவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பின் அவரை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக போலீசார் நேற்று கோழிக்கோடு முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
180 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிகையில் நடிகர் சுரேஷ் கோபி வேண்டுமென்றே தான் நிருபரின் தோளில் கை வைத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.