Saturday, May 18, 2024
Home » இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் தமிழக அரசு அதிரடி அரசாணை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதிர்ப்புக்கு பதிலடி

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் தமிழக அரசு அதிரடி அரசாணை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதிர்ப்புக்கு பதிலடி

by Karthik Yash

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த 2 இலாகாவை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்காத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் பல்டி அடித்து, இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்றார். செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை கூடுதலாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், தமிழக அரசே தனியாக ஒரு அரசாணையை பிறப்பித்து, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று அறிவித்துள்ளது. இதனால் ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழக அரசு பதிலடி கொடுத்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்ததால், நீதிபதி மருத்துவமனைக்கே வந்து காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த 2 துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இது தொடர்பான கடிதத்தை கவர்னருக்கு நேற்று முன்தினம் அனுப்பினார்.

அதில், மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் அளிப்பதாக தனது பரிந்துரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை குறிப்பிடும்படி கேட்டு பரிந்துரை கடிதத்தை அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த அவசர ஆலோசனையில், கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேற்றிரவு மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார். அதில், நீங்கள் (கவர்னர்) கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் துரதிருஷ்டவசமானவை. கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துகளை நேற்று கேட்டறிந்தார். அதனால் உடனடியாக அவரது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் முதல்வரின் பரிந்துரை கடிதத்துக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கும் பட்சத்தில் நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகா மாற்றத்துக்கு தமிழ்நாடு அரசாணை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அவ்வாறு அரசாணை வெளியிடும் பட்சத்தில் அதை வைத்து அதிகாரிகள் துறை ரீதியாக முடிவெடுக்க முடியும் என்று பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கவர்னர் மாளிகையின் அரசு செயலாளர் ஆனந்த் பாட்டீல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு அரசின் பரிந்துரை கடிதத்தை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத் துறை, கூடுதலாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையானது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செந்தில் பாலாஜி கிரிமினல் வழக்குகளை எதிர் கொண்டு தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர் அமைச்சராக தொடர ஒப்புக் கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கவர்னரின் இந்த அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ‘‘யார் அமைச்சாராக தொடரலாம் என்பதை கூற கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையை அமைப்பதற்கான முழு அதிகாரமும் முதல்வரிடமே உள்ளது. கவர்னரின் இந்த விவகாரத்தை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும். கவர்னரின் முடிவு நிச்சயமாக அரசியல் சார்ந்தது தான். தீவிர ஆர்எஸ்எஸ்காரராகவும், பாஜவின் ஏஜென்ட் போலவும் கவர்னர் செயல்படுகிறார். கூடுதல் இலாகா ஒதுக்கீடு விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் கவர்னர். தண்டிக்கப்பட்டால் தான் ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது’’ என்றார். இந்தநிலையில், ஆளுநர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர அரசாணை பிறப்பித்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக மாற்றப்படுகிறது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழக அரசு பதிலடி கொடுத்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பாக முதல்வர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ஆளுநர் முதலில் ஏற்கவில்லை.
* ஆனால் அரசியல் சாசன நெருக்கடிக்கு பயந்து அடுத்த 24 மணி நேரத்தில் பல்டி அடித்து, இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரையை ஏற்றார்.
* எனினும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்தார்.
* இதைதொடர்ந்து, தமிழக அரசு நேற்று அதிரடியாக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என அரசாணை பிறப்பித்தது.

You may also like

Leave a Comment

seventeen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi