சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: வணிகர்கள் தங்கள் வாழ்க்கையில், சாமானிய மக்களோடு இணைந்து பணியாற்றுகின்றனர். மக்கள் மருந்தகம் போல, மக்கள் மளிகை கடைகள் திறக்கப்பட்டால், அதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும். இது எனது ஆசை. அதனை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார் என்றால் அது நிராகரிக்கப்பட்டாதாக அர்த்தம் கிடையாது.
200வது சட்டப்பிரிவு மூன்று விஷயங்களை கூறுகிறது. அதன்படி, ஒன்று மசோதாவை பரிசீலிக்க எடுத்துக்கொள்ளும் காலம் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும். இரண்டாவது ஒப்புதல் தரலாம், மூன்றாவது குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். ஆனால், நிறுத்திவைக்கப்பட்டது நிராகரிப்பு என்று அரசியலமைப்பிலும் அப்படி இல்லை. மணிப்பூர் விவகார பிரச்னைகள் கட்டுக்குள் அடங்குவதற்கான எல்லா பணிகளும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.