சென்னை: தமிழகத்தில், தனியார் மற்றும் மின்வாரியம் சார்பில் 10,170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையிலான காற்றாலைகள் உள்ளன. இதில், மின்வாரியத்துக்கு சொந்தமான தூத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் 17 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த, 1986ம் ஆண்டு முதல் 1993 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட, இந்த காற்றாலைகளில் பெரும்பாலானவை தற்போது செயல்படாமல் உள்ளது. அவற்றை அகற்றி விட்டு, அந்த இடத்தில் அதிக திறன் உடைய காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தனியார் நிறுவனங்களின் காற்றாலைக்கு அருகில் உள்ள காலி இடங்களில், குறுகிய கால பயிர் சாகுபடி செய்யுமாறு அரசு அறிவுறுத்தியது. அதை ஏற்காத அந்நிறுவனங்கள், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதையடுத்து காற்றாலைகளுக்கு அருகில் உள்ள இடங்களில், சூரியசக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றனர். தனியார் நிறுவனங்களின் இந்த முயற்சியை தொடர்ந்து, மின்வாரியத்துக்கு சொந்தமான காற்றாலை உள்ள இடங்களிலும், சூரிய மின்சக்தி மின்நிலையங்களை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்ல, மின் வழித்தடங்கள் உள்ளன. இதனால், ஒரே இடத்திலிருந்து பகலில் சூரியசக்தி மின்சாரமும், பருவகாலங்களில் காற்றாலைகளில் இருந்து காற்றாலை மின்சாரமும், கிடைக்கிறது. இதன்படி, பழைய காற்றாலை உள்ள இடங்களில், 41.57 மெகாவாட் திறனில் காற்றாலை மற்றும் 40.55 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.