தர்மபுரி: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு தர்மபுரி மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா டி.ஆண்டியூர் அருகேயுள்ள ஆலங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவிபாரதி (37). இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இடையில், கவிபாரதி மட்டும் குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்பினார். செல்வி திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது, கவிபாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம், தந்தையின் துக்க காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து செல்வியின் தாயார் காசியம்மாள், கோட்டப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், செல்வியை அவரது கணவர் கவிபாரதி கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிபாரதியை கைது செய்தனர். தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கவிபாரதிக்கு ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.