காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(60). நெசவுத்தொழிலாளி. மனைவி லதா(55). மகன் நவீன். ஐடி ஊழியர். இவரது மனைவி செல்வி, ஐடி ஊழியர். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். தங்கராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அதை மனைவி லதா கண்டித்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், குடிப்பழக்கத்தை காரணம் காட்டி, உரிய நேரத்திற்கு கணவருக்கு லதா சாப்பாடு போடவில்லை என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வேலை பார்த்த நவீன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இதற்கிடையே தங்கராஜ் நேற்று முன்தினம் நள்ளிரவு லதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும், மனைவி மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், தீப்பற்றி இருவரும் அலறியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டு மேல்மாடி அறையில் படுத்திருந்த நவீன், ஓடி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனாலும் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நவீன் 80 சதவீத தீக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.