தேனி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமாபட்டியை சேர்ந்தவர் மாயி (55). இவரது மகள் பவித்ரா (25). இவருக்கும், உசிலம்பட்டி அருகே சொரக்காபட்டியை சேர்ந்த மூவேந்திரன் (27) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. தம்பதி இடையே சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பவித்ராவை அவரது தந்தை மாயி, தேனியை அடுத்த பழனிச்செட்டிபட்டியில் உள்ள அவரது பாட்டி முத்துப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
இதையறிந்த மூவேந்திரன், தனது கூட்டாளியான முருகேசன் (27) என்பவருடன் நேற்று முன்தினம் டூவீலரில் பவித்ரா தங்கியிருந்த வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த மாமனார் மாயியையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு டூவீலரில் நண்பருடன் தப்பி சென்றார்.
இதுகுறித்து பழனிசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மூவேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில், வைகை அணை பகுதியில் பதுங்கியிருந்த மூவேந்திரனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.