பெரம்பூர்: வியாசர்பாடி முல்லைநகர் 82வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (27). இவர் மீது கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி பவித்ரா (25). தம்பதிக்கு அஸ்வந்த் (2) என்ற மகன் உள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கு சில தினங்களுக்கு முன், வயிற்கு வலி ஏற்பட்டதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு, அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது தெரிந்தது.
உடனடியாக, மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த வெள்ளை பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த எம்கேபி நகர் போலீசார், பிரகாசின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.