புதுடெல்லி: பிஎம் கேர்ஸ்-க்கான நிதியை பொதுத்துறை நிறுவனங்கள் வழங்குகின்றன. அது பற்றிய கணக்கு விவரங்கள் எதையும் அரசு கொடுப்பதில்லை. அப்படியானால் மக்களின் பணம் எங்கே? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், “பிஎம் கேர்ஸ் (பிரதமரின் மக்கள் உதவி மற்றும் பேரிடர் கால நிவாரண நிதி) திட்டத்துக்கு தேவையான நிதி பொதுத்துறைகளில் இருந்து கிடைக்க பெறுகிறது. அதற்கான செலவினங்கள் குறித்து அரசு எந்த கணக்கும் தருவதில்லை. அதில் இருந்து எவ்வளவு தொகை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.
மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் நிதி, நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் எங்கு செல்கிறது? இது வரிசெலுத்துவோரின் பணம். அரசு நிறுவனங்கள் மூலம் பிஎம் கேர்ஸ்-க்கு இதுவரை, ரூ.2,900 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதில் ரூ.1,500 கோடி ஓஎன்ஜிசி, என்பிடிசி, பிஜிசிஐ, ஐஓசிஎல், பவர் பைனான்ஸ் கமிஷன் ஆகிய 5 முக்கிய நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் யாருடைய வாழ்க்கையை மேம்படுத்த எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறித்த மதிப்பீடு யாருக்கும் தெரியாது. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு செல்கிறது,” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
* மோடி அரசு கொல்கிறது
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அனைத்து இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் உதித் ராஜ், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்) விரும்பாத பிரதமர் மோடி நிதி குறைப்பு, ஊதிய தாமதம் ஆகிய நடவடிக்கைகளினால் அத்திட்டத்தை கொன்று வருகிறார்,” என்று கூறினார்.