மண்டியா: உ.பியில் டபுள் இன்ஜின் ஆட்சியால் தான் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த கலவரமும் நடக்கவில்லை என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். கர்நாடக மாநில தேர்தலையொட்டி பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மண்டியாவில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கும் காங்கிரசின் வாதம் சட்டவிரோதமானது. உ.பி. மாநிலத்தில் பலமான டபுள் இன்ஜின் ஆட்சி நடப்பதால் கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை.
நாட்டை மீண்டும் பிளவுபடுத்த நாங்கள் தயாராகயில்லை. ஒன்றிய பாஜ மற்றும் கர்நாடக மாநில பாஜ ஆட்சி இணைந்து இஸ்லாமியர்களின் முதுகெலும்பாக இருந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்தது. டபுள் இன்ஜின் ஆட்சியால் தான் உத்தரபிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய சாத்தியமானது. உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கலவரங்கள் இல்லை, தடையுத்தரவு இல்லை. எல்லாம் சுமுகமாக நடந்து வருகிறது. ஒரே இந்தியா, செழிப்பான இந்தியா என்பதை பாஜ நம்புகிறது. பாஜவால் மட்டுமே இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.