புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு மத்தியபிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜ தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், விவசாயிகளின் ரூ.50 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்வதாக துண்டுபிரசுரம் விநியோகித்தார். 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாஜ தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதே சமயம், கடந்த 2018-19ல் 27 லட்சம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த மபி காங்கிரஸ் அரசை, பாஜ தனது அதிகாரத்தையும், பண பலத்தையும் வைத்து கவிழ்த்தது.
இன்னும் எத்தனை காலம்தான் இப்படி பொய் வாக்குறுதிகளை தந்து கொண்டிருப்பீர்கள்? கொரோனா காலகட்டத்தில் மபி பாஜ அரசு ரேஷனில் இலவச உணவுப் பொருட்களை வழங்கியதாக கூறுகிறது. ஆதிவாசிகள் வசிக்கும் பகுதியில் மனிதர்கள் சாப்பிட முடியாத, ஆடு மாடுகளுக்கு போடக்கூடிய கெட்டுப் போன உணவு தானியங்களை வழங்கினர். இப்படிப்பட்ட ரேஷனை தந்து விட்டு எந்த முகத்துடன் ஆதிவாசிகளிடம் ஓட்டு கேட்க பிரதமர் மோடி வருகிறார்? இவ்வாறு பதிவிட் டுள்ளார்.