கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பூபதிநகரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது செங்கலை வீசி கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2022 பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான மோனோபிரோடோ ஜானா உட்பட 2 பேரை கைது செய்து அழைத்துச் சென்றபோது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். அதிகாலை கிராம மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதால் வாகனத்தில் இருந்த என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கிராம மக்கள் ஏஜென்சியின் காரை சேதப்படுத்தினர். மேலும் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. கிராம மக்களின் தாக்குதலை அடுத்து மத்திய பாதுகாப்புப் படையினர் பூபதிநகர் விரைந்தனர். 2022 டிச.3ம் தேதி பூபதிநகரில் குடிசை வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 8 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது. ஜனவரியில் அமலாக்கத்துறையினர் தாக்கப்பட்ட நிலையில் தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதே செங்கலை வீசி கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பல ஆண்களும், பெண்களும் போலீஸ் வாகனத்தை மறித்து, போலீசாரை திரும்பி செல்லுமாறு கூறி சத்தம் போட்டது. பெண்கள் மூங்கில் கட்டைகளை கைகளில் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியாளர்களுக்கு முன்பாக தெருவில் அமர்ந்திருந்தது உள்ளிட்டவை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.