திருப்பூர்: திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களது அன்பை பரிமாறும் வகையிலும், ஆண்டாண்டு காலம் தங்களது நினைவுகள் இருக்கும் வகையிலும் புதுமண தம்பதிக்கு பரிசு பொருட்களை பார்த்து பார்த்து வாங்கி வந்து வழங்குவார்கள். ஆனால் தற்போது வித்தியாசமான முறையில் பலரும் பரிசு பொருட்களை வழங்கி அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்குவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பூரில் ஒரு தம்பதிக்கு மேடையில் காஸ் சிலிண்டர் பரிசாக வழங்கப்பட்டது வைரலாகியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த சையது அபுதாஹிர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த முஹம்முதா தஜ்மீனா ஆகியோருக்கு கடந்த 30ம் தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதன் பின்னர் நேற்று திருப்பூர் வெங்கடேஸ்வராநகரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதுமண தம்பதிக்கு உறவினர்கள் காஸ் சிலிண்டரை பரிசாக வழங்கினர். இதுதொடர்பான படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பொருட்களில் ஒன்றாக காஸ் சிலிண்டர் இருப்பதால் அதனை பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.