திருநெல்வேலி : அம்பாசமுத்திரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் செப்.1ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து செப்.2ம் தேதி காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.