Sunday, May 19, 2024
Home » பக்கா லாபம் தரும் பஞ்சங்குப்பம் தர்பூசணி!

பக்கா லாபம் தரும் பஞ்சங்குப்பம் தர்பூசணி!

by Porselvi

தமிழகத்தின் பல விவசாயிகள் சீசனைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற பயிர்களைச் சாகுபடி செய்து லாபம் பார்க்கிறார்கள். அந்த வகையில் கோடைக் காலத்தில் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தர்பூசணி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த சமயத்தில் புதுச்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சென்றால், அப்பகுதிகளில் உள்ள வயல்களில் தர்பூசணி மயம்தான். புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள பஞ்சங்குப்பம் பகுதியும் அப்படித்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் தனது 66 சென்ட் நிலத்தில் தர்பூசணியைப் பயிரிட்டு கணிசமான லாபத்தைப் பார்த்து வரும் உமாபதி என்ற விவசாயியைச் சந்தித்தோம். தர்பூசணி அறுவடையில் தீவிரமாக இருந்த அவர் நம்மிடமும் பேசினார்.

“பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படிச்சு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விவசாயத்தின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். அப்பா அம்மா கூடவே வயலுக்கு வருவேன். அவங்க செய்ற விவசாய வேலைகளை கவனிப்பேன். அதனால எந்த சீசனில் என்ன பயிரிட்டால் நல்ல லாபம் பார்க்க முடியும், எப்படி நடவு செய்வது என்பது குறித்து நல்லா தெரியும். எனக்கு சொந்தமாக 66 சென்ட் நிலம் மட்டுமே இருக்கறதால சுழற்சி முறையில், பட்டம் பார்த்து பயிர் செய்வேன். எங்க பக்கத்துல இருக்குற நிலம் சவுடு மண் கொண்டது என்பதால் (மணல் சார்ந்த மண்) என்பதால் சுழற்சி முறையில் பயிர் செய்தால் மட்டுமே மகசூல் கிடைக்கும். நிலமும் தரமானதாக மாறும். கடந்த முறை மானாவாரிப்பயிரான மல்லாட்டைய (மணிலா) பயிரிட்டு அறுவடை செய்தேன். இதில் எனக்கு 30 மூட்டை மல்லாட்டை மகசூலாக கிடைத்தது. இதனைப் பயிராக (கடலைப்பருப்பு) பிரித்ததில் 10 மூட்டை கிடைத்தது. இதனை விற்பனை செய்ததன் மூலம் ரூ.90 ஆயிரம் வருமானமாக கிடைத்தது. இதில் செலவுகள் ரூ.50 ஆயிரம் போக ரூ.40 ஆயிரம் லாபமாக கிடைத்தது.

தற்போது அதே நிலத்தில் மகாராஜா ரக தர்பூசணியைப் பயிர் செய்திருக்கிறேன். நடவு செய்வதற்கு முன்பு காய்ந்த மல்லாட்டை இலைகளை நிலத்தில் போட்டு உழவு ஓட்டினேன். மல்லாட்டை செடிகளை அறுவடை செய்த பின்பு சாகுபடி செய்ததால் நிலம் கட்டியாக இல்லாமல் பொலபொலவென இருந்தது. இருந்தபோதும் தர்பூசணிக்காக மூன்று உழவு ஓட்டினேன். மூன்றாவது உழவின்போது காம்ப்ளக்ஸ் 50 கிலோ, டிஏபி 50 கிலோ, 3 டிராக்டர் தொழுவுரம் ஆகியவற்றை அடியுரமாக இட்டேன். 66 சென்ட் நிலத்திற்கு 6 பாக்கெட் விதை தேவைப்பட்டது. ஒரு பாக்கெட்டில் 300 லிருந்து 350 விதைகள் வரை இருக்கும். விதைகளை நேரடியாகவே நிலத்தில் ஊன்றுவேன். ஒவ்வொரு விதையையும் 2 லிருந்து 3 அங்குல அளவுள்ள குழியில் ஊன்றுவேன். விதைகளை ஊன்றுவதற்கு முன்பு விதை நேர்த்தி செய்வேன். நிலத்திற்கு தேவையான விதைகளை தோட்டக்கலைத்துறையிடம் இருந்து வாங்குவேன். ஏற்கனவே நான் எடுத்து வைத்திருந்த விதைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

விதை ஊன்றிய நாளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விடுவேன். 5 லிருந்து 7வது நாளில் விதைகளில் இருந்து முளைப்பு வரத்தொடங்கிவிடும். முளைப்பு வந்தபின்பு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை தண்ணீர் பாய்ச்சுவோம். எங்கள் பகுதியில் தண்ணீர் வசதி குறைவாகத்தான் இருக்கும். இதனால் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீர் விடுகிறோம். சொட்டுநீர்ப் பாசன அமைப்பைத் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அமைத்துக் கொடுத்தார்கள். இதன்மூலம் எனக்கு பெரிய செலவு குறைந்திருக்கிறது. தண்ணீரும் அதிகம் வீணாவது இல்லை. 15வது நாளில் நிலத்தில் களை எடுப்போம். களை எடுக்கும்போது கொடிகள் சேதமடைய வாய்ப்பு இருக்கும். மகசூலும் குறையும். ஆகவே பார்த்து தேவையற்ற களைகளை மட்டும் அகற்ற வேண்டும். களை அகற்றிய பின்பு கொடிகளோடு மண்ணை சேர்த்து ஊன்றி விட வேண்டும். அப்போதுதான் வேர்கள் மண்ணோடு சேர்ந்து நன்கு வளரும்.

பின்னர் 25வது நாளில் ஒரு முறை களை எடுப்போம். இந்தத் தருணத்தில் கொடி முழுவதும் நன்கு பிரிந்து இருக்கும். கொடிகளை டிஸ்டப் செய்யாமல் கண்களுக்கு தெரிந்த களைகளை மட்டும் அகற்றினால் போதுமானது. 30வது நாளில் கொடிகளில் இருந்து பூக்கள் வரத் தொடங்கிவிடும். இலைகளையும், பூக்களையும் புழுக்கள், பூச்சிகள் அதிகம் தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஐந்திலைக் கரைசல் மற்றும் அரசு அங்கீகரித்த மருந்துகளைக் கொடிகளின் மீது தெளிப்போம். கொடிகளில் பூ வைத்த ஐந்தாவது நாளில் பிஞ்சுகள் வரத்தொடங்கிவிடும். மணல் பாங்கான நிலம் என்பதால் திடீரென்று வந்தாலும் பிஞ்சுகள், கொடிகள் என்று எதுவும் அழுகாது. தேங்கும் தண்ணீர் அனைத்தையும் நிலமே உறிஞ்சிக் கொள்ளும். எந்த அளவிற்கு தண்ணீர் விடுகிறோமோ அந்த அளவிற்கு பெரிதான தர்பூசணி கிடைக்கும். அதாவது ஐந்து அல்லது ஆறு கிலோ வரை கூட தர்ப்பூசணி கிடைக்கும்.

60வது நாளில் அறுவடை செய்யத்தொடங்கி விடுவோம். பிறகு ஐந்து நாட்களுக்கு பிறகு அடுத்த அறுவடை செய்வோம். அறுவடை செய்வதற்கு முன்பு காய், பழம் என பிரித்துவிடுவோம். பழுக்காத பழத்தை 2வது அறுவடைக்கு ஒதுக்கி வைப்போம். வெளியாட்களை வைத்து நாங்கள் அறுவடை செய்வது கிடையாது. நாங்களே அறுவடை செய்கிறோம். வெளியாட்களை வைத்து அறுவடை செய்தால் கூலி தர வேண்டும். அது கூடுதல் செலவு. 66 சென்ட் நிலத்தில் இருந்து எங்களுக்கு 7 லிருந்து 10 டன் தர்பூசணி பழங்கள் மகசூலாக கிடைக்கிறது. இதனை நான் நேரடியாக சந்தையில் விற்பது கிடையாது. வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்கிறேன். வியாபாரிகள் ஒரு கிலோ பழத்தை ரூ.10க்கு வாங்குவார்கள். சராசரியாக எனக்கு 8000 ஆயிரம் கிலோ தர்பூசணி கிடைக்கும். இதன்மூலம் ஒரு அறுவடைக்கு ரூ.80 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் உரச்செலவு, மருந்து செலவு, தண்ணீர் பாய்ச்சுவதற்கான டீசல் செலவு என ரூ.35 ஆயிரம் போக ரூ.45 ஆயிரம் லாபமாககிடைக்கிறது.

எங்களிடம் இருந்து வாங்கிச் செல்லும் பழங்களை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.15 லிருந்து ரூ.17 வரை விற்பனை செய்கிறார்கள். நாங்கள் அறுவடை செய்யும் பழங்களை சென்னை, புதுச்சேரி, சேலம், கோவை, பெங்களூர் வியாபாரிகளே அதிகம் வாங்கிச் செல்கிறார்கள். உள்ளூரில் இருக்கும் வியாபாரிகளும் எங்களிடம் இருந்து தர்பூசணிகளை வாங்கிச் சென்று நெடுஞ்சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்கிறார்கள். கோடைகால சீசனில் தர்பூசணிதான் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் நீர்ப்பழமாக இருக்கிறது. தர்பூசணியில் இருந்து நறுமணப் பொருட்கள், பாடி க்ரீம் என்று தயார் செய்யப்படுவதால் கடலூரில் விளையும் தர்பூசணி பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தர்பூசணி எந்தவொரு மணல் பாங்கான இடத்திலும் வளரக்கூடியது. அதனால் விவசாயிகள் பலர் அச்சமின்றி தர்பூசணியை சாகுபடி செய்யலாம். குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடவு செய்தால் எதிர்பார்த்த லாபத்தை எடுக்கலாம். நேரடியாக விற்பனைசெய்தால் கூடுதல் லாபத்தையும் பார்க்கலாம்” என்கிறார் உமாபதி.
தொடர்புக்கு:
உமாபதி: 94438 80124

 

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi