நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே ராமன்துறை குருசடி தெரு பகுதியை சேர்ந்தவர் சுஜின் (29). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி வர்ஷா. இவர்களது மகன் ஷகிப் சேண்டினோ (3). வர்ஷா தனது மகனை அழைத்துக்கொண்டு வாணியக்குடி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஷகிப் சேண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றுள்ளான். ஆனால் நீண்ட நேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த வர்ஷா, உறவினர்கள் அவனை பல இடங்களில் தேடினர். அப்போது விளையாட சென்ற பக்கத்து வீட்டில் கார் நிறுத்தும் போர்டிகோ பகுதியில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியின் உள்ளே ஷகிப் சேண்டினோ பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விளையாடிக்கொண்டிருந்தபோது, குழந்தை தவறுதலாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.