பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள இடிகரை பகுதியில் எம்.ஜி.ஆர் நகர்,அப்துல்கலாம் நகர் உள்ளது. இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இடிகரை மற்றும் கோவில்பாளையம் ரோட்டில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்து தான் இங்கு செல்ல வேண்டும். இங்கிருந்து இடிகரை மற்றும் அத்திபாளையம் அரசு பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் தினமும் 2 கி.மீ தூரம் காட்டு பாதையில் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் பள்ளி செல்பவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இடிகரை அரசு மேல்நிலை பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில்: காட்டு பகுதியில் 2 கி.மீ தூரம் நடந்து வருவதற்க்கு பயமாக உள்ளது. மழை வந்தால் ஒதுங்க கூட இடமில்லை. பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கோவில்பாளையம் சாலை சந்திப்பில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வரை காலை நேரத்தில் அரசு பேருந்து வந்து செல்கிறது. அந்த பஸ்சை எங்கள் ஊர் முடிய வந்து செல்ல நடவடிக்கை எடுத்தால் பள்ளிக்கூடம் சென்று வர வசதியாக இருக்கும் என்று கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளனர்.அரசு அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்து உதவ வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.