வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழர் மரபுகள் சங்கமத்தைச் சேர்ந்த ரேகாசிலக்குமார், வாழி பேரரசன், ஊத்துக்காடு ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்திரி மணிகண்டன், சிறுதானிய தொழில் முனைவர் நிர்மல்குமார், மாநில ஊரக வளர்ச்சித் துறை பயிற்சியாளர் அரவிந்தன், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய உணவு வகைகள் பற்றி மாணவ, மாணவிகளிடம் விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து தனித்தனி அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறு தானிய திணை வகைகளில் உருவாக்கப்பட்ட திண்பண்டங்கள், கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, வரகு அரிசி, இரத்த சாலி அரிசி போன்ற பாரம்பரிய வகைகளில் தயாரிக்கப்பட்ட ருசியான பல்வேறு உணவு வகைகள் மட்டுமின்றி முடவாட்டு கிழங்கு போன்ற ஏராளமான மூலிகை பொருட்கள் மற்றும் 60 வகையான பாரம்பரிய அரிசி வகைகளும் இந்த உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.