ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீராதாரமாக இந்த அணை உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் முல்லைப்பெரியாறு, மூல வைகை, கொட்டகுடி ஆறு ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 4,400 கன அடியாக இருந்த நீர்வரத்து 7 மணிக்கு 19,280 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 66 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில் அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் அணைக்கு நீர்வரத்து 13,384 கன அடியாக இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. அப்போது அணையில் இருந்து 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 70 அடி வரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.