Wednesday, May 15, 2024
Home » கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாள்: திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாள்: திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

by Kalaivani Saravanan

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்குபதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 1908ம் ஆண்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் முதலமைச்சர் மரியாதை செய்தார். அவருடன் வந்த அமைச்சர்கள் அமைச்சர் பெரியகருப்பன், எ.வ.வேலு, சேகர்பாபு, சக்கரபாணி, மதிவேந்தன், சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

You may also like

Leave a Comment

fourteen − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi