சென்னை: வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத் துறை, உணவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. முதலாவதாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி.ராமன் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என்று பெயரிடப்பட்ட வீடு அமையவுள்ள பகுதியான மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள பகுதிக்கு “வி.பி.ராமன் சாலை” என பெயர் சூட்டபட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதான திட்டத்தினை செயல்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசின் மானியத்திற்கான காசோலையையும் நடைபெறவுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் நவீன நெல் சேமிப்பு தளங்களையும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடிய வட்ட செயல்முறை கிடங்குகளையும் முதலமைச்சர் திறந்து வைக்க இருக்கிறார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்படவுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.