பூந்தமல்லி: 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி திருவேற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2024 மக்களவை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் கணேசன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், நான் ஒரு பெருமைக்குரிய வாக்காளர் என்ற பெயரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் முன்பாக நின்று ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.