சென்னை: சென்னை வி.ஐ.டியில் ஆண்டுதோறும் வைப்ரன்ஸ் எனும் தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 8வது வருடமாக நடப்பாண்டில் வைப்ரன்ஸ்-2024 எனும் தலைப்பில், இன்று தொடங்கி 9ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று வி.ஐ.டி. துணை தலைவர் சேகர் விசுவநாதன் அளித்த பேட்டி: வைப்ரன்ஸ்-2024 பொறுத்தவரை ஐ.ஐ.டி., என்.ஐ டி., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும், ஜப்பான், பிரேசில், இலங்கை, மியான்மர், எத்தியோப்பியா, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
200 வகையிலான கலை போட்டிகள், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட 40 வகையான விளையாட்டுப் போட்டிகள் என மொத்தம் 250 போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தப் பரிசுத் தொகை ரூ.10 லட்சம். முக்கிய நிகழ்வாக வைப்ரன்ஸ் முதல் நாள் (இன்று) நடைபெறும் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார். பிரபல பின்னணி பாடகர் ஷ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் (நாளை) பிரபல பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாள்(மார்ச் 8) பிரபல பாடகி ஜோனிதா காந்தியின் இசை நிகழ்ச்சி, புகழ் பெற்ற ஷ்ரே கண்ணா குழுவின் நடனமும் நடைபெறுகிறது. வைப்ரன்ஸ் நிறைவு விழாவில் (மார்ச் 9) பிரபல திரப்பட நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூடுதல் பதிவாளர் மனோகரன், மாணவர் நலத்துறை இயக்குநர் ராஜ சேகர் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.