விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுவாலை கிராமத்தில் மின் கம்பியை மிதித்து இளைஞர் உயிரிழந்த வழக்கில் மின் ஊழியர் கைது செய்யப்பட்டார். செஞ்சி காவல் உட்கோட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுவாலை கிராமத்தில் கடந்த ஜுன் 1ம் தேதி காற்றுடன் கூடிய கனமழை பெய்த போது செல்வராஜ் என்பவர் நிலத்தில் கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது குறித்து பூத்தமேடு மின்துறை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் கடந்த 20 நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே சிறுவாலை கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன் விஷ்ணுபதி (25) நேற்று மாலை வயல் வெளிக்கு சென்ற போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து இளைஞரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், மின் கம்பியை மிதித்து இளைஞர் உயிரிழந்த வழக்கில் மின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மின் கம்பி அறுந்து கிடப்பது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் மின்சாரத்தை நிறுத்தாமல் அலட்சியமாக இருந்த மின் ஊழியர் பாலு மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.