விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த செங்கமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற ஊரில் விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில், 2 வாலிபர்களின் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவ்வழியே சென்ற விவசாயத் தொழிலாளர்கள் பார்த்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டனர். இதில் இருவரும் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு கிடந்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்த வாலிபர்கள் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 23), கோர்க்காடு அன்பரசன் (35) என்பது தெரியவந்தது. இந்த 2 பேரும் புதுவை மாநிலத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2020ல் வில்லியனூரில் நடந்த கொலைக்கு பழிதீர்க்க 2 பேரும் வெட்டிக் கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.