விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவருக்கு எதிராக மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கட்சி நிர்வாகிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.ஏ.டி கலிவரதன் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசியதாக மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் 2 மாதங்களில் பதவி வழங்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் அன்மைக்காலமாக கட்சி நிர்வாகிகளை அவதூறாக பேசுவதுடன் தரக்குறைவாக நடத்துவதாகவும் கலிவரதன் மீது புகார் எழுந்துள்ளது கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட அலுவலகத்தில் சொந்த கட்சி நிர்வாகிக்கு எதிராக சொந்த கட்சியினரே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தியும் கலிவரதன் மீது புகார் கூறியும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மீண்டும் மாவட்ட கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் தெற்குமாவட்ட பாஜக தலைவரை உடனடியாக மாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். விழுப்புரம் மாவட்ட பாஜகவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் குற்றம்சாட்டினர்.