விழுப்புரம்: விழுப்புரம் அடுத்து சிந்தாமணி இந்தியன் வங்கியில் ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான வங்கி காசாளர் கைது செய்யப்பட்ட நிலையில் வங்கிக் கணக்கு மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சம் வரை இழந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கமாக வங்கி பணிக்கு வந்தவர் திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வங்கி அருகே விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வங்கியிலிருந்து வெளியே செல்லும் போது, வங்கியிலிருந்த ரூ.43,89,500-ம் ரொக்க பணத்தை எடுத்து சென்றுள்ளார். வங்கி அதிகாரிகள் காசாளருக்கு பல முறை தொடர்பு கொண்ட போதும் எடுக்காத நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட் ஆப் ஆகியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் காசாளர் அறையை ஆய்வு செய்த போது வங்கியில் இருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. அதன் பிறகு வங்கியில் உள்ள சிசிடிவி கட்சியை ஆய்வு செய்த போது அதில் அவர் பணத்தை எடுத்தது தெரியவந்து.
இதனால் வங்கி மேலாளர் பிரியதர்ஷினி, தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையின் அடிப்படையில் முகேஷின் செல்போன் டவரை வைத்து நேற்று இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். பின்னர், காசாளரிடம் இருந்து கையாடல் செய்த பணத்தை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.