சென்னை: தமிழக்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது அனைத்து மக்களின் அடிப்படை வேண்டுகோளாய் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த மதுக்கடைகளை மூடுவதற்கான சூழல் இல்லை. எனினும் 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவிக்கிறார்கள். குறிப்பாக இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது ஆதரவையும், அடித்தட்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
மதுபானக்கடைகள் மூடப்படுவதை வரவேற்கும் அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் உள்ள நெருக்கடியான இடங்கள், மகளிர் அதிகமாக நடமாடும் மார்க்கெட்டுகள், பஜார் பகுதிகள், மாணவர்கள் நிறைந்த பள்ளி, கல்விக்கூடங்கள், கல்லூரிகள், ஆன்மீக தலங்கள் நிறைந்துள்ள பகுதிகள் போன்றவற்றில் இயங்கிக் கொண்டிருக்கின்ற மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு, தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கையான முன்வைக்கின்றது. ஈரநெஞ்சம் நிறைந்த தமிழ்நாடு முதல்வர் பேரமைப்பின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நல்லதொரு முடிவை விரைந்து எடுத்திட அன்புடன் வேண்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.