தூத்துக்குடி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கூறியதாவது; “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
அன்பு நண்பரை இழந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அசாத்திய மன உறுதியுள்ள மனிதர். அவர் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என நம்பினோம். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாட்டு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர்” இவ்வாறு அவர் கூறினார்.
3 ஆயிரம் போலீசார் குவிப்பு
விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர். இதையடுத்து சென்னை தீவுத்திடலில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்த உள்ளதால், தீவுத்திடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.