Sunday, September 1, 2024
Home » பசிப்பிணி போக்கிய மாமனிதர்!: விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு.. அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல்..!!

பசிப்பிணி போக்கிய மாமனிதர்!: விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு.. அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் உயிர் பிரிந்தது. விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

விஜயகாந்த் மறைவு பேரிழப்பு – திருமாவளவன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு முகுந்த துயருற்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. விஜயகாந்தை பிரிந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர், ரசிகர்கள், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

நடிகர் விக்ரம் இரங்கல்:

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது.

தமிழிசை இரங்கல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்திருக்கிறோம். நல்ல திரைக் கலைஞர், நல்ல அரசியல் தலைவர், நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக நல்லவரை இழந்துவிட்டோம் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் கூறியுள்ளார். பொதுவாழ்விலும் கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளார் விஜயகாந்த் என பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு காங். கமிட்டி இரங்கல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.

நடிகர் சரத்குமார் இரங்கல்:

விஜயகாந்த் மறைவு செய்தி அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது என்று நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். என்றாவது ஒருநாள் குணமடைந்து கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்தேன் என்றும் கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்:

சட்டமன்றத்தில் விஜயகாந்துடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களை மறக்க முடியாது என கே.பாலகிருஷ்ணன் இரங்கல் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் இரங்கல்:

விஜயகாந்துடன் நெருங்கி பழகிய நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பசிப்பிணி போக்கிய மாமனிதர் – அண்ணாமலை

ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர் விஜயகாந்த் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்; தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர், கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

twenty − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi