சென்னை: போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக ஆந்திராவிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதிக விலையில் விற்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக உள்துறை செயலாளர் அமுதா நேற்று பள்ளிப்பட்டு அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.அப்போது சோதனைச் சாவடியில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு போலீசாரிடம் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க, மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கு, கழிப்பிடம், ஓய்வுஅறை உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், தாசில்தார் மதன், இன்ஸ்பெக்டர் மலர் உடனிருந்தனர்.