புதுடெல்லி: துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடியிடம் பேசும்போது பவ்யமாக நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகள் பகிர்ந்து அவரை விமர்சித்து இருந்தனர். மேலும் எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியும் மாநிலங்களவை தலைவர் தன்கரைபோல பேசி விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக தன்கர் மிகுந்த வேதனை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தன்கர் ஆளுநராக இருக்கும்போது முதல்வர் மம்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை மாநிலங்களவை எம்பியும், முன்னாள் தலைமை நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்,வெளியிட்டு காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். இது குறித்து ரஞ்சன் கோகாய் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஆளுநராக இருந்தபோதும், மம்தா பானர்ஜியிடம் பேசும்போது அவர் தலைவணங்குகிறார். ஏனென்றால் இது தான் அவரது இயல்பு. அவரது கண்ணியமான நடத்தையை காங்கிரஸ் கேலி செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.