Monday, May 20, 2024
Home » “வி.பி. ராமன் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

“வி.பி. ராமன் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

by Kalaivani Saravanan

சென்னை: முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன் அவர்கள் வசிந்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள சாலைக்கு “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன் அவர்கள் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு அமைந்துள்ள பகுதியான மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலை பகுதிக்கு, “வி.பி. இராமன் சாலை” எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மறைந்த வி.பி. இராமன், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஒன்றிய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்தியராகவும், பின்னர் தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும், அவர் இறக்கும் நாள் வரை இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆங்கில இதழான ஹோம் லேண்ட் இதழின் துணை ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் சமகாலத்து தலைவர்களின் பேரன்பையும் நன்மதிப்பையும் பெற்றவராகவும் திகழ்ந்தார்.

கல்வி மட்டுமின்றி, கர்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கினார். வி.பி. இராமன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லக்கூடிய அவ்வை சண்முகம் சாலை என பெயரிடப்பட்டுள்ள சாலைப்பகுதியினை “வி.பி. இராமன் சாலை” என தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வி.பி. இராமன் அவர்கள் வாழ்ந்த லாயிட்ஸ் கார்னர் இல்லமும் இப்பகுதியிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் இறையன்பு, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வி.பி. இராமன் அவர்களின் மகன்கள் வழக்கறிஞர் திரு. பி.எஸ். இராமன், திரு. பி.வி.மோகன் இராமன், திரு. பி.ஆர். இராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு. நே. சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் திரு. எஸ். மதன்மோகன், வி.பி. இராமன் அவர்களின் மனைவி திருமதி கல்பகம் இராமன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi