திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கல்லறை மேடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் வில்பட்டியை சேர்ந்த மேல்மலை அமமுக ஒன்றிய செயலாளர் விஜயராஜன் என்பவர் காரின் முன்புறம் அவரது கட்சியின் கொடியை கட்டியபடி வந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் காரை நிறுத்தி கட்சி கொடியை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், காரையும் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த விஜயராஜன் தனது வேஷ்டியை கழற்றியதுடன் அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விஜயராஜனை கைது செய்தனர்.