ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே நடக்கும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தக்களி எனும் நெசவு நெய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருள் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதுவரை 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட ஆறு குழிகளில் சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட 1,150க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தக்களி கண்டெடுக்கப்பட்டது. இது முழுமையான இரும்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘‘முதற்கட்ட அகழாய்வில் தக்களி கிடைத்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்விலும் முழு இரும்புடன் கூடிய, சுடுமண்ணால் ஆன தக்களி கிடைத்துள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது’’ என்றார்.