சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா உள்பட நான்கு பூங்காவின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, குரும்பபட்டி உயிரியல் பூங்கா, சேலம் மற்றும் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் ஆகிய 4உயிரியல் பூங்காக்கள், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்தாண்டு நவ.16ம் தேதி தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21வது ஆட்சி குழுக் கூட்டத்தில் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது. நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, திருத்திய நுழைவு கட்டணம் பின்வருமாறு:
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது.
* 5- 12 மற்றும் 13-17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ 20 மட்டும் வசூலிக்கப்படும்.
* இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான கட்டணம் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.
* சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ.25 ரத்து செய்யப்படுகிறது.சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து. டைம்-ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டணம் முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
* வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் மணி கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூ.115 லிருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பேட்டரி வாகன கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகன கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.150.
* வீடியோ ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.