வேலூர்: தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வேலூர் சென்றடைந்தார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தி-நகரில் உள்ள பாண்டிபஜாரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2ம் நாளான இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் இருந்து வேலூருக்கு புறப்பட்டார். இந்நிலையில், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வேலூர் சென்றடைந்தார். வேலூர் விமான நிலையத்தில் இருந்து கோட்டை மைதானத்திற்கு சாலை மார்க்கமாக பிரதமர் செல்கிறார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து பிற்பகல் 1:30 மணியளவில் கோவை மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, மேட்டுப்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நீலகிரி தொகுதி வேட்பாளரும், ஒன்றிய இணை அமைச்சருமான எல்.முருகன் ஆகிய இருவரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.