*வகுப்பறைகளில் கரும்பலகைகளை சீரமைத்தனர்
வேலூர் : வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் நேற்று ஒருங்கிணைந்து தங்கள் ஆசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.
வேலூர் வெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பல்வேறு பேட்ஜ்களாக அமைப்புகளை ஏற்படுத்தி தாங்கள் பயின்ற பள்ளியில் ஆண்டுக்கொருமுறை சந்தித்து ஆசிரியர்களை கவுரவிப்பதுடன், தங்களால் இயன்ற பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றனர். அந்த வகையில் நேற்று 1973-74ம் கல்வி ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த மாணவர்கள் அணியை சேர்ந்த 120 மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி வளாகத்தில் சந்தித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வணங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து தாங்கள் பயின்ற வகுப்பறைகளின் கரும்பலகைகளுக்கு புதிய வர்ணம் அடித்தும், மாணவர்கள் குடிநீர் தொட்டி, கை அலம்பும் இடம் ஆகியவற்றை சீரமைத்தும் தந்தனர். அதோடு பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர். இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் சலபதி, ரகு, ராமச்சந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.