சென்னை: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2,122.10 ஏக்கர் நிலம் கோயில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிற வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான அகஸ்தியம்பள்ளி கிராமத்திலுள்ள நிலங்கள் வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சர்வமான்ய நிலங்கள் எனவும், அந்நிலங்கள் உப்பு நிறுவனத்தின் அனுபவத்தில் உள்ளதாகவும், அந்நிலங்களுக்கு உப்பு நிறுவனம் குத்தகை தொகையை கோயிலுக்கு வழங்கி வருவதாகவும், அந்நிலங்களை சர்வே செய்து கோயில் பெயரில் பட்டா வழங்க சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலர் நீதிமன்றத்தில் கோயில் செயல் அலுவலர்களால் 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து முறையீடு செய்து வருகிறார்.
தமிழக முதல்வர் இந்நிகழ்வில் சிறப்பு கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார். அதை தொடர்ந்து வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் நிர்வாகத்தால் தொடரப்பட்ட வழக்கில் வேதாரண்யம் வட்டம், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் கட்டுப்பட்ட 2122.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களுக்கு தமிழ்நாடு சிறு இனாம் சட்டம் 1963 பிரிவு 8(2)ன் படி வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் பட்டா பெற முழு தகுதியுடையது என சென்னை உதவி நிலவரித்திட்ட அலுவலரால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு கோயில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுத்து கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோயில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது.