Wednesday, May 8, 2024
Home » வளமான வாழ்வருளும் வராஹர்

வளமான வாழ்வருளும் வராஹர்

by Nithya

‘சாதுக்களை ரட்சிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிக்கிறேன்’ என்று பகவான் வராஹ அவதாரம் போது வாக்குறுதி அளித்துள்ளார். ஹிரண்யகசிபுவின் சகோதரனான இரண்யாக்ஷன், தன் வலிமையால் பூமியைப் பாயாக சுருட்டி எடுத்துக் கொண்டு கடலில் மூழ்கினான். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொள்ள, திருமால் வராஹம் உருவெடுத்து கடலினுள் புகுந்து, அசுரனை தன் கோரைப்பற்களால் குத்திக் கொன்று, பூமியைத் தன் கோரைப்பற்களின் இடையே சுமந்துகொண்டு மீட்டுவந்தார் என்கிறது வராஹ அவதார வரலாறு.

விலங்கினங்களிலேயே மிகவும் அசுத்தமானது பன்றி. சேற்றிலே மிதந்து கொண்டும், பூமியில் கிடைக்கும் கோரைக்கிழங்கு போன்றவற்றை உணவாகக் கொண்டு வாழும். அத்தகைய விலங்காக பகவான் உருவெடுத்து பூமியை மீட்டெடுத்தார். இந்த அவதார காலத்தில்தான் பூமிப்பிராட்டிக்கும், அவள் மூலமாக உலகத்தோருக்கும் வாக்களிக்கிறார் பரந்தாமன்.

மனிதனின் மனம் ஆசையில்லாமலும், உடல் ஏதுமின்றிருக்கும் போதும், வாதம்-பித்தம்-சிலேத்துமம் தாதுக்கள் ஒரே அளவாய் இருக்கும் போதும், பிறப்பு-இறப்பு இல்லாதவனாகிய என்னை நினைக்கும் போது, எனது திருவடி நிலையான மோட்ச சாம்ராஜ்ய பலனை அவனுக்கு அளிக்கிறேன். இந்த வாக்குறுதியை பூமிப்பிராட்டி வராஹப் பெருமானிடம் உலகோர் அனைவரும் மிகவும் எளிதாக திருமாலை அடைய வழி சொல்ல வேண்டியபோது அளித்தார். பூமிப்பிராட்டியின் தாயுள்ளத்தையும், எம்பெருமானின் தயாள குணத்தையும் இதிலிருந்து அறியலாம். வாக்குறுதி, அதைக் காப்பாற்றுவது என்பதை நோக்கும்போது வராஹத்தின் வாக்குறுதியே மேலானது என்றும், அதுவே நம்பத்தகுந்தது என்றும் பராசர பட்டர் அருளிச் செய்துள்ளார்.

இப்படிப்பட்ட வராஹப் பெருமான் பூமிப்பிராட்டிக்கு மட்டுமில்லாமல், ஆழ்வார்கள் அனைவருக்குமே ஞானத்தை அருளியவன். நம்மாழ்வார், ‘‘ஏனத்துருவாய் இடந்த ஞானப்பிரானை யல்லால் இல்லை நான் கண்டது நல்லதுவே’’ என்று வராஹப் பெருமானை போற்றியுள்ளார். பெரியாழ்வாரும் ‘‘எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஒதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்’’ என்கிறார்.

இத்தகைய பெருமைகளைத் தன்னிடத்தே கொண்ட வராஹப் பெருமானுக்கு நாடெங்கும் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. வராஹப் பெருமானின் வழிபாடு தொன்மையானது. ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாமணிக் கோயில், திருவிடந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவேங்கடம், திருக்குறுங்குடி போன்ற தலங்களில் இந்தப் பெருமையை உணரலாம். காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில் காட்சியளிக்கும் கள்ளழகரையும் ஆதிவராஹப் பெருமான் என்றே திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீமுஷ்ணத்தில் சிறு உருவாய் இரண்டு திருக்கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சியளிக்கிறார். வராஹப் பெருமானின் திருவுருவம் வராஹ நரசிம்மமாக ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் அமைந்துள்ளது.

பஞ்சமுக ஹனுமானின் ஐந்து முகங்களில் ஒன்று வராஹம். வராஹப் பெருமானே திருவிடந்தையில் அகிலவல்லி சமேத ஆதிவராஹனாய் இடப் பக்கத்திலே லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளித்துக் கொண்டிருக்க, திருக்கடல்மல்லை என்ற திவ்யதேசத்தில் பல்லவர் கால குடவரைக் கோயிலில் ஸ்ரீஆதிவராஹப் பெருமான் தன் வலப்பக்கத்தில் லக்ஷ்மியை அணைத்தவாறு காட்சியளிப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அமைப்பு. இப்பெருமான் திருக்கோயில் திருவலவெந்தை என அழைக்கப்படுகிறது. இங்கு பெருமான் இவ்வாறு காட்சியளிப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு.

பல்லவ அரசனான ஹரிசேகர மகாராஜா தம் குலதெய்வமான திருவிடந்தையில் ஆதிவராஹப் பெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டிருந்தான். தினமும் கடல்மல்லையிலிருந்து திருவிடந்தை வந்து பெருமானை தரிசித்து பின் அரண்மனையில் நான்காயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்த பிறகே தாம் உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் திருக்கடல்மல்லைக்குச் செல்வதற்கு முன்பாகவே அரசன் முன் ஒரு வயோதிக அந்தணர், ஒரு சிறுமியுடன் தோன்றி தமக்கு பசியாக உள்ளது என்று கூற, அரசன் பெருமானை மானசீகமாகப் பிரார்த்தனை செய்து அம்முதியவரையே வராஹப் பெருமானாகவும், சிறுமியை பூமிப்பிராட்டியாகவும் நினைத்து உணவளித்தான்.

அதனால் மனமகிழ்ந்த பெருமான் பூமிப்பிராட்டியுடன் அரசனுக்கு அங்கேயே காட்சியளித்தான் என்கிறது வரலாறு. இந்த சந்நதி 1200 வருடங்களுக்கு மேல் பழமையானது. பல்லவர்களால் அமைக்கப்பட்ட இக்குடவரைக் கோயிலில் பெருமான் திருவடி கீழ் ஆதிசேஷன் தன் பத்தினியுடன் காட்சியளிக்கிறார். எம்பெருமானுக்கு வலப்புறத்தில் கஜலட்சுமியையும், ஈஸ்வரன் இடப்புறத்தில், விஷ்ணு துர்கையும், சதுர்முக பிரம்மாவும் உள்ளனர். பல்லவ மன்னர்களில் ஒருவரான ஹரிசேகர மகாராஜா தெற்கு நோக்கியும், எதிரில் வடக்கு நோக்கி மகேந்திர பல்லவனும் காட்சியளிக்கிறார்கள்.

இத்தலத்தில் மட்டுமே வராஹப் பெருமான் வலப்புறத்தில் லட்சுமியை தாங்கியபடி வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான் சந்நதிக்கும் புனரமைப்பு செய்து மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. இந்த ஆதிவராஹப் பெருமானை தரிசித்தால் கல்வி வளரும், ஞானம் வளரும், பூமி சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியடையலாம். சர்ப்ப தோஷங்கள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் நிறைவேறும். மக்கட்பேறு அமையும்.

தொகுப்பு: மகி

You may also like

Leave a Comment

thirteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi